ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களமிறங்கிய ஆப்பிள் ! ஆப்பிள் வாட்ச் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாங்க வேண்டும்!
ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கியுள்ளது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனம். அதன் விவரங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்.
ஐபோன், ஐபேட் மாதிரியான டிஜிட்டல் சாதனங்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அதற்காகவே சந்தையில் தனக்கென ஒரு பெயரையும் வாங்கியுள்ளது. தற்போது அதன் புராடெக்ட்டுகளை விரிவுபடுத்தும் நோக்கில் புது முயற்சியாக ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கியுள்ளது. இதற்காக ஹைட்ரேட் ஸ்பார்க் என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது ஆப்பிள்.
ஹைட்ரேட் ஸ்பார்க் நிறுவனம் டிஜிட்டல் வாட்டர் பாட்டில்களை விற்பனை செய்து வருகிறது. இப்போது ஆப்பிளுடன் கைகோர்த்துள்ளது. இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் உடன் இந்த பாட்டிலை பயனர்கள் ஸிங் (Sync) செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்து விட்டால் பயனர்கள் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரத்தில் இந்த பாட்டிலில் உள்ள எல்.இ.டி லைட்டுகள் ஒளிர்ந்து நோட்டிபிகேஷன் கொடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆப்பிள் ஹெல்த் அப்ளிகேஷன் துணையுடன் இந்த பாட்டில்கள் இயங்குமாம். பயனர்களின் உடல் இயக்கத்தை டிராக் செய்து அதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் குடிப்பது தொடர்பாக இந்த பாட்டில் நினைவுபடுத்தும் என தெரிகிறது.
ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ பாட்டில் விலை ரூ.4,592க்கும், ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ ஸ்டீல் ரூ.6,126க்கும் கிடைக்கும் என தெரிகிறது. இருந்தாலும் தற்போதைக்கு இது அமெரிக்க சந்தையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன்களை வேரியண்ட்களில் வெளியிட்டே பழகிப் போனதாலோ என்னவோ, வாட்டர் கேனையும் ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ, ப்ரோ ஸ்டீல் என்ற இரண்டு வேரியண்ட்களிலேயே வெளியிட்டிருக்கிறது ஆப்பிள்.
இந்த வாட்டர் பாட்டிலை வாங்க உங்களிடம் ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்ச் இருக்க வேண்டியது அவசியம். இப்போது வாட்டர் பாட்டிலையும் வாங்கிவிட்டால், ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் எது இருக்கிறதோ, அதனுடன் Sync செய்து கொள்வது கட்டாயம்.
அந்த நொடி முதல் உங்களது உடலின் தண்ணீர் அளவை கண்காணிக்கும் காவலனாக மாறிவிடுகிறது ஆப்பிளின் அந்த வாட்டர் பாட்டில். ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது உயரம், எடைக்கேற்ப, உடலுக்கு தேவையான நீரின் அளவும் மாறுபடுகிறது என்கிறது மருத்துவம்.

அந்த வகையில், நாள்தோறும் நாம் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்; ஆனால், எவ்வளவு குடிக்கிறோம் என்பதை கணக்கிடுவதே இதன் முக்கிய பணி. பாட்டிலின் கீழ்ப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. சென்சார் தான் நாம் குடிக்கும் தண்ணீரை கணக்கிடும் கால்குலேட்டர்.
ஆப்பிள் வாட்டர் பாட்டில் மூலம் நீர் குடிக்கும்போது, நமது உடலுக்கு கிடைக்கும் சத்துகளின் அளவை கணக்கிட்டு, ஆப்பிள் ஹெல்த் அப்ளிகேஷனுக்கு அப்போதே தகவல் அனுப்பும் இந்த சென்சார். உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் நேரத்தில் நாம் குடிக்காமல் தவிர்த்துவிட்டால், தயங்காமல் ஒளிர்ந்து தகவல் சொல்லும் எல்.இ.டி. லைட்டுகள்.
பல நோய்களுக்கு நீரே மருந்து என்ற மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்ற நினைப்பவர்களுக்கு ஆப்பிளின் இந்த வாட்டர் பாட்டில் ஒரு வரம். ஒருமுறை ஊற்றி வைக்கப்படும் குளிர்ந்த நீரை 24 மணி நேரம் வரை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் இந்த ஆப்பிள் வாட்டர் பாட்டில், இப்போது கிடைப்பது அமெரிக்காவில் மட்டுமே.
Leave a Comment